×

மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்; வெளிநாடு ஏற்றுமதிக்கு தயாராகும் 500 மெட்ரிக் டன் புளி

ராமநாதபுரம், ஏப்.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு புளி அமோகமாக விளைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமார் 500 மெட்ரிக் டன் ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவை. உலகம் முழுவதும் பயன்படுத்துக்கின்ற உணவு பொருட்களில் தவறாமல் இடம் பெறுவது சரியான அளவில் ருசியும், மருத்துவ குணமும் கொண்டது புளி ஆகும். புளி இலை, பழம், முத்து (விதை அல்லது கொட்டை)பட்டை,மரம் என அனைத்தும் பயன்படுத்தப்படும் ஓர் பொருளாக உள்ளது. உணவு மற்றும் நோய் தீர்க்கும் அறுமருந்தாகவும் பயன்பட்டு வரும் வேளையில் அதன் விதையான புளியம் முத்துவும் கால்நடை தீவனமாகவும், பசை தயாரிப்பு, நாட்டு வைத்தியம் உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய புளி கடந்தாண்டை போன்று இந்தாண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முத்து நீக்கப்பட்ட புளி மற்றும் முத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் அந்நிய செலவாணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும் கூட, பனைமரம், புளிய மரம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாயல்குடி, நரிப்பையூர், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர் போன்ற செம்மண் பகுதிகள், திருப்புல்லானி, ராமநாதபுரம், நயினார்கோயில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, போகலூர், கமுதி,கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள், குளங்கள், கண்மாய் போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமின்றி வீட்டு பகுதிகள் என லட்சக்கணக்கான புளியம் மரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 வருடங்களை கடந்த மரங்கள் அதிகளவில் உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சிகளால் புளி காய்ப்பது குறைந்து, புளி வரத்தும் குறைந்து காணப்பட்டது. மரங்கள் பட்டு போனதால் மரச்சாமான், விறகு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக சில இடங்களில் பழைய மரங்கள் வெட்டப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களாக நல்ல மழை பெய்ததால் புளிய மரங்கள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்தது. இதனால் இந்தாண்டு புளியங்காய் நன்றாக காய்த்தது. கடந்த ஒரு மாதங்களாக விவசாயிகள் மரத்தில் பறித்து பழத்தை முத்து(விதை) எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுகுளத்தூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது புளியம் பழம் பழத்தன்மை எட்டியுள்ளதால் அவற்றை பறித்தல், சேகரித்து கூடு உடைத்து, புளி எடுத்தல், முத்தை நீக்குதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புளி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட எடையிலான புளி, எடுக்கப்படும். முத்து கூலியாக கொடுக்கப்படுகிறது. சிலருக்கு ரூ.300 முதல் கூலி வழங்கப்படுகிறது. ஒரு பெரிய மரத்தில் குறைந்தது 100 கிலோ புளி, சுமார் 50 கிலோ முத்து(கொட்டை)கிடைக்கிறது. கடந்தாண்டு ஒரு கிலோ புளி ரூ.80க்கும், முத்து ரூ.15க்கு போனது. ஆனால் இந்தாண்டு ஒரு கிலோ புளி ரூ.120 வரை விலை போகிறது என்றார். ராமநாதபுரம் வியாபாரி ஒருவர் கூறும்போது, இந்தாண்டு புளி வரத்து அதிகரித்துள்ளதால் புளியம் முத்து வரத்தும் அதிகரித்துள்ளது. முத்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ புளி ரூ.120 முதல் 140 வரைக்கும், முத்தோடு உள்ள புளி ரூ.40 முதல் தரத்திற்கேற்றார் போல் மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு புளி மட்டும் ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரையிலும், முத்து கிலோ ஒன்றிற்கு விலை ரூ.15 விலை நிர்ணயம் செய்து விலைக்கு வாங்கப்படுகிறது. புளிகள் மொத்தமாக கடைகளுக்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் செல்வது வழக்கம். முத்துக்களை கால்நடை தீவனங்கள் அரைப்பதற்காக விருதுநகர் வியாபாரிகள், பிராய்லர் கோழி தீவனத்திற்கு நாமக்கல், ஈரோடு பகுதி வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கேரளா போன்ற அண்டை மாநிலங்கள். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உணவு பயன்பாட்டிற்கு புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகமாக பசை தயாரிப்பிற்கு பயன்படுவதால் சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 வெளிநாடுகளுக்கு ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமார் 500 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டும் அதே அளவு ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாதாரண புளி மற்றும் முத்து கூட அந்நிய செலவானியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

The post மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்; வெளிநாடு ஏற்றுமதிக்கு தயாராகும் 500 மெட்ரிக் டன் புளி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...